அதிமுக தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பு எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைப்பு!
அதிமுக தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சமர்ப்பித்தது.
நாடாளுமன்ற தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட அதிமுகவின் தேர்தல் அறிக்கையை, பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு நேரில் சென்று அக்கட்சியை சேர்ந்த தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஒப்படைத்தது. இந்த குழுவில், அதிமுக துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன், அமைப்பு செயலாளர் செம்மலை, பொன்னையன், டி ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், ஆர் பி உதயகுமார், வளர்மதி, வைகைச் செல்வன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்த பின் முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்தார்.
முன்னால் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் அதிமுக தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அளித்துள்ளோம். தேர்தல் அறிக்கையில் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால் அதிமுக பொதுச்செயலாளர் மேற்கொள்வார். இதனை தொடர்ந்து விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் பொன்னையன் பாமக மற்றும் தேமுதிக உடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார்.