Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சட்டப்பேரவையில் குட்கா: “உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும்” - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

11:41 AM Jul 31, 2024 IST | Web Editor
Advertisement

சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்து முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வில்  கடந்த ஜூலை 29-ம் தேதி விசாரணைக்கு வந்தன.

அப்போது, ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கடந்த 2017-ம் ஆண்டு அதிமுகவில் பன்னீர்செல்வம் அணியினர் உருவானது, 18 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டது, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தியது உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டி, ஆட்சி கவிழ்ந்து விடக்கூடும் என்ற காரணத்தால் இந்த உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக வாதிட்டார்.

அத்துடன், அரசியலமைப்பு சட்டப்படி, பதவிக்காலம் முடிந்ததும், சட்டமன்றம் கலைந்து விடுகிறது. நிலுவையில் உள்ள மசோதாக்கள், உரிமை மீறல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் காலாவதியாகி விடுகின்றன என பல்வேறு உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி வாதிட்டார். மேலும், தற்போதைய சட்டமன்றம் இந்த விவகாரத்தை விசாரிக்க முடியாது எனவும், உள்நோக்கத்துடன் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் குறிப்பிட்டார்.

முந்தைய உரிமைக் குழு தலைவராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமன், தற்போது உரிமைக்குழு உறுப்பினராக இருந்து வரும் நிலையில், அவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, குழுவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தாலும், நிலுவையில் உள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றார்.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், மசோதாக்கள் காலாவதியாகலாம். ஆனால் உரிமை மீறல் போன்ற நடவடிக்கைகள் எப்படி காலாவதியாகும் என்ற கேள்வி எழுந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், அந்த நடவடிக்கைகள் முடிவுக்கு வர அனுமதிக்க வேண்டும் என தெரிவித்து, வழக்கின் தீர்ப்பை இன்று (ஜூலை 31) தள்ளி வைத்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும் என்றும், இது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் நோட்டீஸ்க்கு பதிலளிக்கவும், சட்டமன்ற விதிகளின்படி உரிமைக் குழு விசாரணையை விரைவில் முடித்து இறுதி முடிவெடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சட்டமன்ற விதிக்கு எதிராக செயல்படுவதை அனுமதித்தால் அது தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும் எனவும், மக்களின் பிரதிநிகள் அடங்கிய சட்டமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Tags :
ADMKDMKGutka Casemadras highcourtMK StalinNews7Tamilnews7TamilUpdatesSpecialized CourtTN Assembly
Advertisement
Next Article