ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்த குருபகவான்! எந்தெந்த ராசிகாரர்களுக்கு நேரம் அமோகமா இருக்கு தெரியுமா?
அருள்மிகு குருபகவான் இன்று (மே 1-ம் தேதி) மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
2024-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 1-ஆம் தேதி நிகழ்ந்துள்ளது. குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்கிறார்.தற்போது மாறக்கூடிய குருபகவான் ரிஷப ராசியிலிருந்து தனது ஐந்தாம் பார்வையால் கன்னி ராசியையும் - ஏழாம் பார்வையால் விருச்சிக ராசியையும் - ஒன்பதாம் பார்வையால் மகர ராசியையும் பார்க்கிறார். குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விடப் பார்க்கும் பலமே அதிகம். எனவே குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும்.
இந்நிலையில், இன்று விடுமுறை நாள் என்பதால், தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் காலை முதலே கூட்டம் அலைமோதியது. ஆலங்குடி குருபகவான் கோயில், திட்டை குருப்பரிகாரக் கோயில், ஆவடி அருகே பாடியில் அமைந்துள்ள திருவலிதாயம் சிவன் கோயிலிலும் சிறப்பு ஆராதனைகள் காட்டப்பட்டன. ஏராளமான மக்கள் குருபகவானை வழிபட்டனர். பல்வேறு கோயில்களிலும் குருபெயர்ச்சி நாளான இன்று அதிகாலை முதல் சிறப்பு குருபரிகார ஹோமம், அதனைதொடர்ந்து அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
ஆலங்குடி குரு பகவான் கோயிலில் அதிகாலை முதல் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசனம் செய்து சென்றனர். மாலை 5.19 மணிக்கு குருபகவான் மேஷராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியின் போது குருபகவானுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது.