ஆளுநர் தேநீர் விருந்து | தவெக தலைவர் #Vijay-க்கு அழைப்பு?
ஆண்டுதோறும் குடியரசு மற்றும் சுதந்திர தினங்களன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு குடியரசு தினத்திற்கான (ஜன.26) ஆளுநர் தேநீர் விருந்து நிகழ்வு இன்னும் இரு தினங்களில் நடைபெறவுள்ளது.
ஆளுநர் மாளிகையில் மாலை நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆளுநர் மீதான அதிருப்தியின் காரணமாக, கடந்தாண்டைப் போல் இந்தாண்டும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக , கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. கடந்தாண்டு, குடியரசு தின விழா தேநீர் விருந்தில் , முதல்வர் பங்கேற்காவிட்டாலும் அமைச்சர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி தவெக தலைவர் விஜய்க்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் தரப்பில் அளிக்கப்படும் தேநீர் விருந்துக்கு அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் நிலையில், புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கும் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.