"நாற்பதுக்கு நாற்பது என்பது சாதாரண வெற்றி அல்ல ; மகத்தான சாதனை" - திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
" நாற்பதுக்கு நாற்பது என்பது சாதாரண வெற்றி அல்ல , மகத்தான சாதனை " என திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளை வென்றுள்ளது. இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று தொடங்கியது. இந்த நிலையில் திமுக சார்பில் வெற்றி பெற்ற எம்பிக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் , திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
” நாற்பதுக்கு நாற்பது என்ற இந்த வெற்றி என்பது சாதாரணமான வெற்றி அல்ல. கடந்த 2004ம் ஆண்டு, 20 ஆண்டுகளுக்கு முன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நமக்குப் பெற்றுத் தந்த வெற்றி இது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இந்த தேர்தலில் அந்த ஒன்றையும் சேர்த்து நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளை நாம் வென்றுவிட்டோம்
இரண்டாவது தேர்தலில், முழுமையான வெற்றியைப் பெறுவது என்பது சாதாரணமான சாதனை அல்ல, வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையாகும். ஒரு சில மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் லேசாக மாறி இருந்தால் I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும்.