கொட்டித் தீர்த்த கன மழையால் வெள்ளப்பெருக்கு - குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை!
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கன மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 2-வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.