ஹைதராபாத் சார்மினார் அருகே தீ விபத்து - 17 பேர் உயிரிழப்பு!
ஹைதராபாத்தின் அடையாளச் சின்னமான சார்மினார் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தகவல் அறிந்து 11 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து, தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.
இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், நிவாரணம் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறுகையில், "இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் வருத்தமளிக்கின்றன. நான் மத்திய அரசு மற்றும் பிரதமரிடம் பேசி, இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி பெற முயற்சிப்பேன்” என்றார்.