"சோறு போடாத மகனை கொலை செய்த தந்தை" - சொத்தை எழுதி வைத்தும் தன்னை பராமரிக்கவில்லை என குற்றச்சாட்டு!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆ.கலிங்கப்பட்டியில், வசித்து வருபவர் விவசாயி கந்தசாமி. இவருக்கு அண்ணாதுரை, சின்னச்சாமி என இரண்டு மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். 78 வயதான கந்தசாமி தனது சொத்துக்கள் அனைத்தையும் இரு மகன்கள் மீது எழுதி வைத்துள்ளார். சொத்துக்களை பெற்றுக்கொண்ட இரு மகன்களும் கந்தசாமியை முறையாக பராமரிக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் வங்கிக் கணக்கிலும், தன்னிடம் இருந்து சேர்த்து வைத்த பணத்தையும் இரு மகன்களும் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இருவருமே தாயை மட்டும் கவனித்துக் கொள்வதாகவும் தந்தையான கந்தசாமிக்கு உணவு கூட அளிப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கந்தசாமி, வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறை வரை புகார் அளித்த நிலையில் அரசு அறிவுறுத்தப்பட்டும் இரு மகன்களும் சாப்பாடு போடவில்லை என கூறப்படுகிறது.
மேலும் கடந்த வாரம் ஊர் திருவிழாவின் போது மகன்கள் இருவரும் ஆடு வெட்டி சமைத்து சாப்பிட்ட போதும் தனக்கு உணவு அளிக்கவில்லை என வேதனையில் இருந்துள்ளார் கந்தசாமி. இந்நிலையில் ஆத்திரம் அடைந்த கந்தசாமி, நேற்று நள்ளிரவு கயிற்றுக் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த மூத்த மகன் அண்ணாதுரையை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.
இதில் அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் சீனிபாபு தலைமையிலான போலீஸார், அண்ணாதுரையின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மணப்பாறை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.