விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே,வடகரை கிராமத்தில் ராஜா சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான யுவராஜ் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த அலையில் இன்று காலை வழக்கம்போல் 175 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரித்தபோது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 3 பட்டாசு தயாரிப்பு அறைகள் இடிந்து சேதமானது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் தண்டியனேந்தலை சேர்ந்த கருப்பையா (38), பேச்சியம்மாள் (40), கல்குறிச்சியை சேர்ந்த செளன்டம்மாள் (54) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளனர்.
மேலும் கணேசன் (50) செல்லப்பன் (45) உள்ளிட்ட 3 பேர் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் ஆய்வு நடத்தினார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காரியாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ரசாயன மூலப் பொருட்களில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.