“தொலைவில் இருந்தாலும், எங்கள் இதயத்துக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள்” - பூமி திரும்பும் சுனிதா வில்லயம்ஸ்-க்கு பிரதமர் மோடி கடிதம்!
இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லயம்ஸ், அமெரிக்காவைச் சேர்ந்த புட்ச் வில்மோர் ஆகியோரை விண்வெளி ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப நாசா திட்டமிட்டது. அதன்படி கடந்த ஆண்டு ஜூன் ஆம் தேதி போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.
குறுகிய ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இருவரும் தங்களது பணிகளை முடித்து விட்டு பிறகு விண்கல தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாமல் கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தவித்து வந்தனர்.
அவர்களை மீண்டும் பூமிக்கு கொண்டுவர அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ‘க்ரூ டிராகன் 9’ என்ற விண்கலத்தை கடந்த மார்ச் 15ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பியது. அடுத்தநாள் ‘க்ரூ டிராகன் 9’ விண்கலத்தில் சென்ற குழு சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லயம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருடன் இணைந்தனர்.
தொடர்ந்து இந்திய நேரப்படி இன்று காலை 10.35 மணியளவில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 வீரர்களுடன் ‘க்ரூ டிராகன் 9’ விண்கலம் பூமியை நோக்கி புறப்பட்டது. இந்த விண்கலம் இந்திய நேரப்படி நாளை(மார்ச்.19) அதிகாலை 3.27க்கு புளோரிடா கடற்கரையில் தரையிரங்குவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இந்த நிலையில் பூமி திரும்பும் சுனிதா வில்லயம்ஸ்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். அதை மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “இந்திய மக்களின் சார்பாக உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று ஒரு நிகழ்ச்சியில், பிரபல விண்வெளி வீரர் மைக் மாசிமினோவைச் சந்தித்தேன். எங்கள் உரையாடலின்போது, உங்களைப் பற்றியும் உங்கள் பணியைப் பற்றியும் எவ்வளவு பெருமைப்படுகிறோம் என்பதைப் பற்றி விவாதித்தோம். இந்த உரையாடலைத் தொடர்ந்து, உங்களுக்கு கடிதம் எழுதாமல் இருக்க முடியவில்லை.
நான் அமெரிக்காவுக்கு வருகை தந்தபோது அதிபர் டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் பைடனைச் சந்தித்தபோது, உங்கள் நலம் குறித்து விசாரித்தேன். 140 கோடி இந்தியர்களும் உங்கள் சாதனைகளில் பெருமிதம் கொண்டுள்ளனர். நீங்கள் ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவில் இருந்தாலும், தொடர்ந்து எங்கள் இதயத்துக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள்.
இந்திய மக்கள் உங்கள் ஆரோக்கியத்துக்காகவும் வெற்றிக்காகவும் பிரார்த்தனை செய்கிறார்கள். பூமிக்கு திரும்பிய பிறகு, இந்தியாவில் உங்களைப் பார்ப்பதற்கு நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தியா தனது மிகவும் புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்பதற்காக மகிழ்ச்சியுடன் காத்திருக்கும். நீங்களும், வில்மோரும் பாதுகாப்பாக திரும்ப வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.