"அமெரிக்காவில் இருந்தாலும் கவனித்துக் கொண்டே இருப்பேன்" - திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்!
அமெரிக்காவில் இருந்தாலும் கட்சியையும் அரசையும் கவனித்துக் கொண்டே கொண்டிருப்பேன் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சித் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை காலை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. கட்சியின் அறிவுறுத்தலின்படி, கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் ரூ.100 மதிப்பிலான கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியிட முன்வந்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும், தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் பாகுபாடு காட்டும் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
“நாடாளுமன்றத் தேர்தலில் 40 க்கு 40 வெற்றிக்கு உழைத்த நிர்வாகிகள், வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். சுணக்கமின்றி செயல்பட்டால் அடுத்த முறையும் திமுக ஆட்சிதான்.
200 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவுக்கு அவ்வளவு நலத்திட்டங்களை மக்களுக்கு அளித்திருக்கிறோம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்ட செயலாளர்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் இருந்தாலும் கட்சியையும் அரசையும் கவனித்துக் கொண்டிருப்பேன்.
சார்பு அணிகளை மாவட்டச் செயலாளர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அனைத்து பூத் கமிட்டிகளையும் செம்மைப்படுத்த வேண்டும். கழகத்தின் அனைத்து அமைப்புகளிலும் செப்டம்பர் 15க்கு முன்பாக பொது உறுப்பினர் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மினிட் புத்தகம் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
உங்கள் உழைப்பின் அடிப்படையிலேயே உயர்வு இருக்கும்.
அரவனைத்துச் செல்பவரே மாவட்ட செயலாளர். வெற்றி பெறுபவரே வேட்பாளர்.
அமைச்சர்களும் கழகத்தின் அடிமட்டத் தொண்டர்களுக்கு உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும். கலைஞர் 100 நாணயம் வெளியீட்டில் கலந்து கொள்ள வேண்டும்.
கழகத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க அர்ப்பணிப்போடு செயல்படுங்கள் ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.