#Erode கிழக்கு இடைத்தேர்தல்... வாக்களித்தார் திமுக வேட்பாளர் சந்திரகுமார்!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி (இன்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன.
இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. திமுக மற்றும் நாதக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து போட்டியிடுவதாக அறிவித்தனர். 53 வாக்குப்பதிவு மையத்தில் உள்ள 237 வாக்குச்சாவடியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் தேர்தல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கி 17ம் தேதியுடன் நிறைவடைந்தது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்த தேர்தலில் திமுக, நாதக உட்பட 46 பேர் களத்தில் உள்ளனர். வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் துணை ராணுவ வீரர்கள், பட்டாலியன் போலீசார் மற்றும் போலீசார் என மொத்தம் 2,678 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே வாக்களர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தல் இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் சூரம்பட்டி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். தொடர்ந்து பிப்.8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.