வேட்பாளர்களை காட்டிலும் நோட்டா அதிக வாக்குகளைப் பெற்றால் தேர்தலை ரத்து செய்யப்படுமா? - தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காட்டிலும் நோட்டா அதிக வாக்குகளைப் பெற்றால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 543 தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், முதற்கட்டமாக கடந்த 19-ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 88 தொகுதிகளில் இரண்டாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து பகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்நிலையில், பொதுவாக எந்தவொரு தேர்தல் என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயருடன் கீழே நோட்டாவும் இருக்கும். வேட்பாளருக்கு பதிலாக நோட்டாவுக்கு வாக்களிப்பது வழக்கமான ஒன்று தான். இந்நிலையில், நோட்டாவுக்கு 99.99% வாக்குகள் விழுந்து, ஒரு வாக்கு எதாவது வேட்பாளர் பெற்றிருந்தாலும், அந்த வேட்பாளர் தான் வென்றவராக அறிவிக்கப்படுவார்.
இதையும் படியுங்கள் : “சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்தது கண்டிக்கத்தக்கது” – ராமதாஸ் கண்டனம்!
இது தொடர்பான உச்சநீதிமன்றத்தில் எழுத்தாளரும் பேச்சாளருமான ஷிவ் கேரா என்பவர் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார். அதில், ஒரு குறிப்பிட்ட தொகுதியில் வேட்பாளர்களைக் காட்டிலும் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் அந்தத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இதில், கேரா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் கூறியதாவது :
"குஜராத் மாநிலம் சூரத்தில் என்ன நடந்தது எனப் பார்த்து இருப்பீர்கள். காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. பிற வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். இதனால், தேர்தலும் இல்லாமலேயே பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நல்ல வேட்பாளர்களை நிறுத்த அரசியல் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதே நோட்டாவின் நோக்கமாகும்.ஒரு தொகுதியில் உள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது நோட்டா என்பது வாக்காளரின் கைகளில் ஒரு சக்திவாய்ந்த ஆயுதம். ஆனால், அவை முறையாக மற்றும் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. நோட்டா குறித்துத் தேர்தல் ஆணையம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. நோட்டாவை ஒரு வேட்பாளர் போலக் கருத வேண்டும். ஆனால் இந்தியத் தேர்தல் ஆணையம் இதைச் செய்யத் தவறிவிட்டது. தேர்தலில் நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும்"
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இது தொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதாவது:
"இது தேர்தல் நடைமுறை பற்றியது. இது குறித்துத் தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்" என்று கூறி தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.