ஒடிசாவில் ’சங்கு’ முழங்கி பரப்புரை - சங்கு முழங்க ஆள் இல்லாமல் தவிக்கும் அரசியல் கட்சிகள்!
ஒடிசாவில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் ’சங்கு’ முழங்கி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒடிசாவில் மொத்தமுள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், 21 மக்களவைத் தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு மே 13-ஆம் தேதி நடைபெறுகிறது. ஒடிசாவில் வேட்புமனு தாக்கல் செய்ய இம்மாதம் 25ஆம் தேதி கடைசி நாளாகும். ஒடிசாவில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்.
இந்த நிலையில் அந்த மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர்கள் 'சங்கு' சின்னத்தில் போட்டியிடுவதை தொடர்ந்து, அவர்களில் பலர் சங்கு முழங்கி பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவர்கள், பழங்குடியின பாரம்பரிய மஞ்சள் அல்லது பச்சை ஆடை அணிந்து, தலையில் முண்டாசுக் கட்டிக் கொண்டு, சங்கு முழங்கிக் கொண்டு வேட்பாளர்களை மக்களிடம் அறிமுகப்படுத்தினர்.
இந்த நிலையில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவாக சங்கு முழங்குவதற்கு ஆள் பற்றாக்குறையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் பாரம்பரியமாக சங்கு முழங்குவோர் எண்ணிக்கை சுமார் 25 ஆயிரத்தை தாண்டும் என்று கூறப்படுகிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமில்லாமல், யாராக இருந்தாலும், அவர்களுக்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதை இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.