பஹல்காம் தாக்குதல் எதிரொலி | மேலும் 4 பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டம்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதல் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாறி மாறி எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகள் காரணமாக எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், அவா்களின் ஆதரவாளா்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினா் தீவிரப்படுத்தியுள்ளனா். பயங்கரவாதிகளுக்கு உதவியதாக நூற்றுக்கணக்கானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பஹல்காம் போன்று இனியொரு தாக்குதல் நிகழாமல் தடுக்கும் நோக்கத்துடன் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் (ஏப்.25) தெற்கு காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. தொடர்ந்து, நேற்று (ஏப்.26) பயங்கரவாதிகளுக்குச் சொந்தமான மேலும் 4 வீடுகளை பாதுகாப்புப் படையினர் இடித்தனர். இதன்மூலம், காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த இரண்டு நாட்களில் அழிக்கப்பட்ட மொத்த வீடுகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.