”டீ, பன் கொடுத்து ஏமாற்றி விடலாம் என கணக்கு போடாதீர்கள்” - திருமாவளவன் எம்.பி. பேச்சு!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் ‘விசிக விருதுகள்’ வழங்கும் விழா நேற்றிரவு(ஜூன்.24) நடைபெற்றது. இதில் ஆந்திர திராவிடப் பல்கலைக் கழகம் முன்னாள் துணைவேந்தர் கே.எஸ்.சலம்-க்கு அம்பேத்கர் சுடர் விருதும், நடிகர் சத்யராஜுக்கு பெரியார் ஒளி விருதும், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் பொதுச்செயலாளர் தியாகுவுக்கு மார்க்ஸ் மாமணி விருதும், வைத்திலிங்கம் எம்.பி.-க்கு காமராசர் கதிர் விருதும் வழங்கப்பட்டது.
அத்துடன் பௌத்த ஆய்வறிஞர் ஜம்புலிங்கத்திற்கு அயோத்திதாசர் ஆதவன் விருதும், தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை தலைவர் காஜா முயீனுத்தீன் பாக்கவிக்கு காயிதேமில்லத் பிறை விருதும், தமிழறிஞர் சண்முகதாஸுக்கு செம்மொழி ஞாயிறு விருதும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் திருமாவளவன் நிறைவுரையாற்றியபோது, “ஆதரவாகவோ எதிராகவோ எப்படியாவது எங்களைப் பற்றி பேசிக்கொண்டிருங்கள். ஏனென்றால் புதிய இந்தியாவை உருவாக்கவும் அம்பேத்கரின் கனவை நினைவாக்குவதற்கும் நாங்கள் போராடுபவர்கள். எங்களுக்கு டீ, பன் கொடுத்து ஏமாற்றி விடலாம் என கணக்கு போடாதீர்கள். 10 சீட்டுக்கு மேல் எப்போதும் எங்களுக்கு தர மாட்டோம் என்பது உங்கள் மதிப்பீடு.
எங்களை பொறுத்தவரை நாங்கள் 234 தொகுதிகளுக்கும் தகுதியானவர்கள். இதை நான் தேர்தல் கணக்கில் சொல்லவில்லை சமூக மாற்றத்தின் அடிப்படையில் சொல்லுகிறேன். அதனால்தான் நாம் மதச்சார்பின்மை பேரணியை நடத்தினோம். மதச்சார்பின்மைதான் இந்தியாவின் கருப்பொருளாக இருக்கிறது” என்று பேசினார்.