சென்னைவாசிகளின் தேவையை பூர்த்தி செய்கிறதா பேருந்து சேவை? பொதுமக்கள் கூறுவது என்ன?
இந்தியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிக போக்குவரத்து சேவை
நடைபெறும் முதன்மை இடமாக சென்னை மாநகராட்சி திகழ்ந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் வசித்து வரும் ஒரு கோடி மக்களின் பொது போக்குவரத்தாக காணப்படுவது சென்னை போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்படும் மாநகரப் பேருந்துகள் தான். சென்னையில் மெட்ரோ ரயில் சேவை, பறக்கும் ரயில், மின்சார ரயில் சேவை வந்தாலும் தலைமுறை பெரும்பாலான தலைமுறையாக சென்னைவாசிகள் பேருந்து சேவையை, நம்பி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆட்சி மாற்றம் ஏற்படும் போதுமே போக்குவரத்து துறைக்கென 10 முதல் 12,000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து துறைக்கு ரூ.12,964 கோடி ஒதுக்கினார். தமிழ்நாடு முழுவதும் மகளிர் இலவச பயணத் திட்டத்திற்கான ரூ. 3,600 கோடி , மாணவர்களின் பேருந்து மானிய கட்டணத்திற்காக ரூ.1,782 கோடி, டீசல் மணியத்திற்காக ரூ.1,857 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. குறிப்பாக சென்னை நகர கூட்டான்மை தத்துவத்தின் 646
கோடி ரூபாய் ஒத்துக்கப்பட்டது. சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த ஆறு மாதத்தில் மட்டுமே தாழ்தள பேருந்து, நவீன வசதி பேருந்து, குளிர்சாதன பேருந்துகள் என பல்வேறு வகையான 500-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னைவாசிகள் தினம் தோறும் பயன்படுத்தும் வகையில் சென்னையில் நாள்தோறும் மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் உட்பட 3,232 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 1,500 மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் தினம் தோறும் 3,300 பேருந்துகள் வரை இயக்கப்பட்டாலுமே, சென்னைவாசிகளின் தேவையை பொது போக்குவரத்து சேவை பூர்த்தி செய்கிறதா? என்று கேட்டால் அது ஒரு கேள்விக்குறியாக தான் அமைகிறது. ஒரு சில இடங்களில் போதுமான போக்குவரத்து வசதி இருந்தாலுமே பல்வேறு பகுதிகளுக்கு தேவையான போக்குவரத்து வசதி இல்லாததால் இன்று வரை பொதுமக்கள் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக சென்னை பிராட்வேயில் இருந்து கொளத்தூர், வில்லிவாக்கம், பெரம்பூர்,
வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு போதுமான போக்குவரத்து வசதி இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் கொரட்டூர், புளியந்தோப்பு,
புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தான்
பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அந்த அரை மணி நேரத்திற்கு ஒரு முறை இயக்கப்படும் பேருந்துகளில் கூட முறையான பாதுகாப்பு வசதி உள்ளதா? என கேட்டால் இல்லை என தன்னுடைய ஆதங்கங்களை பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக சென்னை பெருநகர மாநகராட்சியில் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் பெரும்பாலும் சேதம் அடைந்துள்ளதாகும், குறிப்பாக ஜன்னல்கள் முழுவதும் துருப்பிடித்து கூர்மையான ஆயுதம் போன்று இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். பேருந்துகளில் அமரும் இருக்கைகள் முறையாக இல்லாததால் அமர முடியாமல் தவித்து வருவதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இருக்கையில் கூட முறையாக வழங்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர். மாநகரப் பேருந்துகளின் படிக்கட்டுகள் மூன்று அடிக்கு மேல் இருப்பதால் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் படிக்கட்டில் ஏறுவதற்கு மிகவும் சிரமப்படுவதாக கூறுகின்றனர்.
முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் ஒருவரின் உதவி இல்லாமல் இந்த
பேருந்துகளில் ஏற முடியாது என குற்றம்சாட்டப்படுகிறது. பேருந்துகளின் மேற்கூறைகள் முழுவதும் சேதமடைந்துள்ளதால் மழைக்காலங்களில் பேருந்துகளுக்குள் தண்ணீர் வருவது வழக்கமாக இருந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இது மட்டுமல்லாமல் சென்னை மாநகர பேருந்துகளின் படிக்கட்டுகள் உடைந்து விபத்துக்குள்ளாகுவது அவ்வப்போது நடந்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பொது போக்குவரத்து சேவை என்பது பொதுமக்களின் தேவைக்காக அமைய வேண்டுமே தவிர,
பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கக்கூடாது என்பது பேருந்தில் பயணிக்கும் மக்களின் கருத்தாக இருந்து வருகிறது.
ஒரு பேருந்தின் ஆயுட்காலம் என்பது 12 வருடங்கள் மட்டுமே. இருப்பினும் சென்னை புறநகர் பகுதியில் இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் முழுவதுமே ஆயுட்காலம் முடிந்து இயக்கப்படுவதால் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றை பொது போக்குவரத்து சேவைக்கு உட்படுத்தக் கூடாது என்பது பொதுமக்களின் கோரிக்கையாகவே இருந்து வருகிறது. இது மட்டுமல்லாமல் பேருந்துகளை இயக்குவதற்கு முறையான ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறையால் போதிய நேரத்தில் பேருந்து கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகும், உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சேதமடைந்துள்ள பேருந்துகளை உடனடியாக அகற்றிவிட்டு புதிய பேருந்துகளை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்பதும் சென்னை வாசிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.