மக்களவைத் தேர்தலில் அதிக சொத்து மதிப்புள்ள வேட்பாளர் யார் தெரியுமா?
ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் சார்பில் போட்டியிடும் பி.சந்திரசேகருக்கு ரூ.5,785 கோடி சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் சட்டப் பேரவைக்கும் 25 மக்களவைத் தொகுதிக்கும் ஒரே நேரத்தில் வரும் மே 13-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனை, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து, மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் முன்னப்பில் தேர்தலைச் சந்திக்கின்றன. ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் சார்பில் பி.சந்திரசேகர் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், அவரது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5,785 கோடி என வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். அந்த வகையில் தற்போதுவரை மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பணக்கார வேட்பாளராக அவர் திகழ்கிறார்.
சந்திரசேகருக்கு ரூ.2,448.72 கோடி சொத்துகளும், அவரது மனைவிக்கு ரூ.2,343.78 கோடி சொத்துகளும் குழந்தைகளின் பெயரில் சுமார் ரூ.1,000 கோடி சொத்துகளும் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்காவின் ஜெ.பி.மோர்கன் வங்கியில் ரூ.1,138 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.