தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் பட்டயப் படிப்பு - எப்போது முதல் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக தொழில் நுட்புநர் பட்டயப் படிப்பு பயிற்சிக்கு வரும் 19-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப்படிப்பு பயிற்சி தொடங்கப்படவுள்ளது.
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப்படிப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு விதிகளின்படி ஒற்றை சாளர முறையில் சமூகம் வாரியாக சுழற்சி முறையில் மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்,
இயக்குநர்
தொற்றுநோய் மருத்துவமனை
எண்.187 திருவொற்றியூர் நெடுஞ்சாலை,
தண்டையார்பேட்டை, சென்னை-600 081
என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் வரும் பிப்.19-ம் தேதி முதல் பிப்.25-ம் தேதி வரை, காலை 10 முதல் மாலை 4 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்.28-ம் தேதி மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது என பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.