சுய விளம்பரத்தால் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று திமுக கருதுகிறது - கிருஷ்ணசாமி விமர்சனம்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
"திமுக அரசு எந்தப் பிரச்சினையையும் தீர்க்காமல் விளம்பரம் மட்டுமே செய்து
வருகிறது. சுய விளம்பரத்தால் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று
கருதுகிறது. ஆட்சிக்கு எதிரான எரிமலை கீழே இருந்து உருவாகியுள்ளது.
இந்திய குடியுரிமை உள்ள எந்த வாக்காளர்களின் உரிமைகளும் பறிக்கப்படக்கூடாது. குடியுரிமையற்றவர்கள் வாக்காளர் தகுதியற்றவர்கள் , போலியான பெயர்களிலோ, இரண்டு முதல் நான்கு இடங்களில் வாக்குகள் இருந்தால் வாக்காளர் பட்டியலில் இடம் பெறக்கூடாது. போலி வாக்காளர்கள் விவகாரம் எதிர்காலத்தில் ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கும்.
பிரதமரே தனக்கு எதிராக சட்டத்தை இயற்றியுள்ளார் என்பதை எப்படி தவறாக சொல்ல முடியும். அண்மை காலங்களாக ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டுதான் முறைகேடுகள் நடக்கிறது. சாதாரணமாக உள்ளாட்சி அமைப்புகளான மேலிருந்து கீழ் வரையிலும் தலையாரி முதல் தலைமைச் செயலாளர் வரை ஊழல் செய்யும் முடிவுக்கு வந்துவிட்டனர்.
தவறு செய்யும் வாய்ப்புகளையும் உருவாக்கி கொள்கின்றனர். ஊழல் தான் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்குகிறது. ஊழல்களால் தான் எந்தப் பணிகளும் நடைபெறுவதில்லை. அரசின் எந்த சலுகைகளும் பலன்களும் அடிமட்ட மக்களுக்கு சென்று சேர்வதில்லை. ஊழலை வேரோடும் வேரடி
மண்ணோடும் பிடுங்கி எரிய வேண்டும். அதனுடைய துவக்கமாகத்தான் 30-நாட்களுக்குள் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதன் மூலமாக ஊழலுக்கு எதிரான யுத்தம் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கொஞ்சமாவது பயம் வரும்"
என்று தெரிவித்தார்.