முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் திமுக எம்.பி.க்கள் கூட்டம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் (நவ.29) திமுக எம்.பி.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 29-11-2025 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அதில், கட்சி மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் 19 தேதி வரை நடைபெற உள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இதற்கிடையே, தமிழ்நாடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் SIR பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாடாளுமன்றத்தில் கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு, எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்புவது குறித்து திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.