“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் திமுக உள்ளது” - ராமதாஸ்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வெற்றிப் பெற்றுவிடும் என்ற அச்சத்தில் திமுக உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி.அன்புமணி, தொகுதிக்குப்பட்ட கிராமங்களில் வீதிவீதியாக சென்று மாம்பழம் சின்னத்தில் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அவரை ஆதரித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி., பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌவுமியா அன்புமணி, இவர்களது மகள் சங்கமித்ரா ஆகியோர் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும் வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் விக்ரவாண்டி பெரியார் திடலில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
“விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்து விடும் என்ற பயத்தில் பல்வேறு பிரச்னைகளில் ஈடுபட்டு வருகின்றது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரையில் ஈடுபடும் போது பொதுமக்களை பங்கேற்க விடாமல் திமுகவினர் தடுத்து நிறுத்துவதாக தகவல்கள் வருகின்றன. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வெற்றி பெறும் என்ற அச்சத்தில் திமுக உள்ளதாக நினைக்கிறேன். அதிமுகவினர் தங்களது வாக்குகளை வீணாக்காமல் நமது பொது எதிரியான திமுகவுக்கு எதிராக பாமகவிற்கு வாக்களிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.