"விஜயை காப்பாற்ற வேண்டிய எண்ணம் திமுகவிற்கு இல்லை" - அமைச்சர் ரகுபதி
கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர். இதனிடையே, விஜய் பிரச்சாரம் செய்த வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? அவர் மீது ஏன் வழக்கு பதியவில்லை என காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இணையத்தில் பலரும் திமுக, விஜயை பழிவாங்குவதாக கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது,
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை என்றைக்கும் தலைகுனிய விடவில்லை. யார் தலைகுனிய விட்டார்கள் என்பது நேற்று உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்த வார்த்தைகளை பார்த்தால் தெரியும். தமிழ்நாட்டில் இடம் கிடைக்காத பாஜக தமிழ்நாட்டில் யாராவது கிடைப்பார்களா? என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த ஆதாயமும் கிடைக்காது.
தவெக தலைவர் விஜயை காப்பாற்ற வேண்டிய எண்ணம் திமுகவிற்கு இல்லை. யாரையும் அனாவசியமாக கைது செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. சட்டம் தன் கடமையை செய்யும். தவெக தலைவர் விஜய்க்கு பாஜக தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பதில் இருந்து விஜய் பாஜகவின் C டீம் என்பது உண்மையாகிறது. தவெகவினர் நீதிமன்றம் குறித்து பேசுவதற்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். விஜயை பற்றி கருத்து சொல்லவிரும்பவில்லை"
இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.