ஆஸ்கர் விருது வென்ற எழுத்தாளருடன் இயக்குநர் நித்திலன் சாமிநாதன்!
அமெரிக்க திரைக்கதை எழுத்தாளரான அலெக்சாண்டர் டைனலாரிஸ் ஜூனியர், கடந்த பேர்ட்மேன் படத்தின் திரைக்கதைக்காக கடந்த 2015 ஆம் ஆண்டு 87வது அகாடமியின் ஆஸ்கர் விருதை வென்றார். இந்த நிலையில் தமிழ்த் திரைப்பட இயக்குநர் நித்திலன் சாமிநாதனை நேரில் அழைத்து அலெக்சாண்டர் டைனலாரிஸ் ஜூனியர் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஆஸ்கர் விருதுடன் அலெக்சாண்டர் டைனலாரிஸ் ஜூனியருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நித்திலன் சாமிநாதன், “நியூயார்க்கில் ரசிக்க வேண்டிய ஒரு தருணம்... பேர்ட்மேன் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் ஒன்று. ஆஸ்கார் விருது வென்ற திரைக்கதை எழுத்தாளருடன் தினமும் உணவருந்தி நேரத்தை செலவிடுவது என்பது சாதாரண காரியமில்லை. என்னை உங்கள் வீட்டிற்கு அழைத்ததற்கும், என்னிடம் இவ்வளவு அன்பு காட்டியதற்கும் நன்றி அலெக்சாண்டர் டைனலாரிஸ் ஜூனியர். இதற்காக நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்” என்று நெகிழ்ச்சியாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய் சேதுபதியை வைத்து நித்திலன் சாமிநாதன் இயக்கிய மகாராஜா திரைப்படம். இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்காக நித்திலன் சாமிநாதனுக்கு மெல்போர்ன் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து தாய்லாந்து தூதரகம், நெட் ஃபிளிக்ஸ், ஐஎம்டிபி உள்ளிட்ட பல தரப்பில் இருந்து அவருக்கு பாராட்டுகளும் விருதுகளும் குவிந்தது. இந்த நிலையில் அவரை தற்போது அலெக்சாண்டர் டைனலாரிஸ் ஜூனியர் அழைத்து பாராட்டியிருப்பது மற்றொரு அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.