சோனியா காந்தி குறித்து சுப்ரியா ஷ்ரினேட் அவதூறாக கருத்து பதிவிட்டாரா? - வைரலாகும் Screenshotன் பின்னணி என்ன?
This News Fact Checked by ‘The Quint’
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் பதிவிட்டதாக ஒரு எக்ஸ் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. 2012 ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் படத்தைப் பதிவிட்டு அவரை கேலி செய்ததாகக் கூறி அப்பதிவு வைரலாகி வருகிறது . அந்த ட்வீட்டின் தலைப்பு "ஏன் மேடம்? இத்தாலியில் உள்ள அனைத்து நடன விடுதிகளும் மூடப்பட்டனவா?" என இந்தியில் எழுதப்பட்டிருந்தது.
வைரலாக பரவும் பதிவுகள் தொடர்பாக தி குயிண்ட் நடத்திய ஆய்வில் சோனியா காந்தியைப் பற்றி ஒருபோதும் அப்படி பதிவிடவில்லை என்றும், இது ஒரு போலியான எக்ஸ் பதிவு என்றும் சுப்ரியா ஷ்ரினேட் எங்களிடம் உறுதிப்படுத்தினார்.
போலி என எப்படி கண்டுபிடித்தோம்?
Xல் முக்கிய வார்த்தைகளை பயன்படுத்தி இந்த பதிவை சரிபார்த்தோம். தேடலின் முடிவில் அத்தகைய பதிவு இடம்பெறவில்லை என கண்டறிந்தோம். ஷ்ரினேட்டின் X கணக்கிலிருந்து அத்தகைய ட்வீட் எதுவும் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்தபின்னர். வைரலான ஸ்கிரீன்ஷாட்டில் தேதி ஏப்ரல் 24, 2012 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என கண்டறிந்தோம். அந்த குறிப்பை எடுத்துக்கொண்டு, ஷ்ரினேட்டின் கணக்கில் தேதி வாரியான ட்வீட்களை நாங்கள் சரிபார்த்தோம், எந்த முடிவுகளும் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக நாங்கள் ஷ்ரினேட்டைத் தொடர்பு கொண்டோம்: இந்த ஸ்கிரீன்ஷாட் போலியானது என்பதை அவர் Team WebQoof- க்கு உறுதிப்படுத்தினார்.
மேலும் "இது முற்றிலும் தவறானது. 2012 ஆம் ஆண்டு நான் டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் வணிக செய்தி சேனலான ET NOW இன் நிர்வாக ஆசிரியராக இருந்தேன். என் தந்தை அப்போது (2009-14) காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தார். சோனியா காந்தி மீது எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு, அவரைப் பற்றி நான் ஒருபோதும் அப்படிச் சொல்ல மாட்டேன்," என்று அவர் மேலும் விளக்கினார்.
மேலும், வைரல் ஸ்கிரீன்ஷாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளபடி, ரோமன் ஸ்கிரிப்ட்டில் எழுதப்பட்ட வார்த்தைகளை தான் ட்வீட் செய்யவில்லை என்றும், ஆங்கிலம் அல்லது இந்தி மொழியை மட்டுமே பயன்படுத்துவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
முடிவு:
2012 ஆம் ஆண்டு சுப்ரியா ஷ்ரினேட் சோனியா காந்தியை அவமதித்ததாகக் கூறும் ஒரு போலி ட்வீட்டின் ஸ்கிரீன் ஷாட் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தி குயிண்ட் நடத்திய உண்மை சரிபார்ப்பில் அத்தகைய ட்வீட் போலியாக தயாரிக்கப்பட்டு பகிரப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Note : This story was originally published by ‘The Quint’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.