கோவை வாக்காளர் பட்டியலில் பெயர்கள் மாயம்...| உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு!
கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கிய வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த வாரம் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது கோவை மாவட்டத்தின் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கிய வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வரும், கோவையைச் சேர்ந்த சுதந்திர கண்ணன் என்பவர் இந்த பொதுநலன் மனுவை தாக்கல் செய்தார்.
வாக்களிக்கும் வரை தேர்தல் முடிவை அறிவிக்கக் கூடாது எனவும், சுதந்திர கண்ணன் பொதுநல மனு தொடர்ந்து இருந்தார். 2019, 2021-ல் தேர்தல்களில் வாக்களித்த நிலையில் இந்த முறை பெயர் நீக்கப்பட்டுள்ளது. தங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்களர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.