மருத்துவ சாதனங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு! விரைவில் கர்ப்பப் பை புற்றுநோய் தடுப்பூசி திட்டம்!
பட்ஜெட்டில் மருத்துவ உபகரணங்கள் குறித்தும், நிர்மலா சீதாராமன் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டிய நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று தொடங்கியது. கடந்த காலங்களில் அனைத்து பட்ஜெட்டையும் பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் தாக்கல் செய்த நிலையில் முதன்முறையாக பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
உற்பத்தி அதிகரிப்பு, ஊரக மேம்பாடு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட 9 குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். மேலும், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை மையப்படுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
மேலும், மருத்துவ உபகரணங்கள் குறித்தும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.அதில், மருத்துவ உபகரணங்கள், சில மருந்துகளுக்கு சுங்கவரி குறைக்கப்படுகிறது. புற்றுநோய்க்கு பயன்படுத்தும் மேலும் 3 மருந்துகளுக்கு இறக்குமதி வரி ரத்து செய்யப்படுகிறது. விரைவில் கர்ப்பப் பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.