பட்டாசு ஆலை வெடிவிபத்து - ஒருவர் கைது!!
பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஒருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குண்டாயிருப்பு கிராமத்தில் நேற்று (பிப்.17) விக்னேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான குழு தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக பட்டாசு சாலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால், போர்மேன் சுரேஷ்குமார் ஆகிய மூன்று பேர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு மனித உயிருக்கு சேதம் ஏற்படுத்தியது. வெடிப்பொருட்களை முறையாக கையாளாதது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் போர்மேன் சுரேஷ்குமாரை மட்டும் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் இதுவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ் உள்ளிட்ட 3 பேரும் பட்டாசு ஆலையை முறையாக பராமரிக்காமலும், தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமலும், வெடிபொருள் மருந்து கலவையை சரிவரி கலக்கி கொடுக்காததால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரண நிதியாக வழங்க உத்தரவிட்டார்.