வேகமெடுக்கும் கொரோனா... கர்நாடகாவில் ஒருவர் உயிரிழப்பு!
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச் சென்றது. ஊரடங்களு, தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் 257 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் இதுவரை மொத்தம் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. பெங்களூரு நகரில் மட்டும் 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, கர்நாடகாவில் ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த 85 வயது முதியவர் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
அவருக்கு பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்பட்டு இருந்ததுடன், சுவாச கோளாறுகளும் இருந்தன. இதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதனுடன், கொரோனா பரிசோதைனையும் எடுக்கப்பட்டது. இதற்கிடையே, சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 17ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவு நேற்று வெளிவந்து. அதில், அந்த முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், இன்று முதல் மக்களிடம் கொரோனா பரிசோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.