கர்நாடகத்தில் மராட்டிய அமைப்பினரை கண்டித்து இன்று முழு அடைப்பு!
பெலகாவியில் கடந்த மாதம்(பிப்ரவரி) 21ம் தேதி மராத்தியில் பேச மறுத்த கர்நாடக அரசு பேருந்து கண்டக்டர் மீது மராட்டிய அமைப்பினர் தாக்குதல் நடத்திய விவகாரம் கர்நாடகம்-மராட்டியம் இடையே மொழி பிரச்சினையாக மாறியது.
இதன் காரணமாக கர்நாடகத்தில் மராட்டிய மாநில பேருந்துகளும், மராட்டியத்தில் கர்நாடக அரசு பேருந்துகளும் தாக்கப்பட்டன. இந்த விவகாரம் இரு மாநிலங்களிடையே பதற்றமான சூழலை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பின் இரு மாநிலங்களிடையே இயல்பு நிலை திரும்பியது.
இந்த விவகாரத்தில் மராட்டிய அமைப்பினரை கண்டித்து கர்நாடகத்தில் 22-ந் தேதி(இன்று) முழு அடைப்பு நடத்துவதாக கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்திருந்தார்.
அதன்படி, கர்நாடகத்தில் இன்று(சனிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து தரப்பு மக்களும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு வழங்க வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், பெங்களூரு மாநகர போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு வழங்கியுள்ளன. அதேநேரம், பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் வழக்கம் போல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளி-கல்லூரிகளில் இறுதி தேர்வுகள் நடைபெற்று வருவதால் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழு அடைப்பு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ள நிலையில் கன்னட அமைப்பினர் பெங்களூருவில் இன்று ஊர்வலம் நடத்த உள்ளனர். இதனை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் வலுக்கட்டாயமாக கடைகளை மூடும்படி கூறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.