12ம் வகுப்புத் பொதுத் தேர்வு - முதல் நாளிலேயே இவ்வளவு ஆப்செண்ட்டா?
தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
12ம் வகுப்பை தேர்வினை எழுத 7,518 பள்ளிகளில் இருந்து 8.03 லட்சம் மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.
தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். அதே போல் முறைகேடுகளை தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. தேர்வு மையங்களில் மாணவ, மாணவியருக்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.
ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்றும் ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த முயன்றால், பள்ளி நிர்வாகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் தேர்வு துறை கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. மேலும் பொதுத் தேர்வு குறித்த சந்தேகங்கள், புகார்களை தெரிவிக்க, பள்ளிக்கல்வி துறையின் ‘14417’ என்ற இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது
இன்று காலை தொடங்கிய முதல் நாள் தேர்வில் மொழிப்பாடத்தின் முதல் தாளுக்கான தேர்வு நடைபெற்றது. தேர்வினை எழுதிய மாணவர்கள் சிலர் எளிமையாக இருந்ததாகவும், சிலர் கொஞ்சம் கடினமாக இருந்ததாகவும் கலவையான பதில்களை தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற தேர்வில் 11,430 மாணவர்கள் தேர்வினை எழுதவில்லை என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.