சென்னை திரும்பினார் முதலமைச்சர் #MKStalin!
முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை திரும்பினார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 27-ம் தேதி இரவு அமெரிக்கா சென்றார். அங்கு சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து கடந்த 2-ம் தேதி சிகாகோ சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். மொத்தம் ரூ.7,618 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தமிழக அரசு மற்றும் அந்த நிறுவனங்களுக்கு இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின. இதன் மூலம் தமிழ்நாட்டில் 11,516 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அமெரிக்காவிலிருந்து கிளம்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் மற்றும் திமுகவினர் ஆயிரக்கணக்கில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.