முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் மருத்துவமனையில் அனுமதி!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள். இவர் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இவருக்கு நேற்றிரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தயாளு அம்மாள் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாளு அம்மாவின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
மேலும், அவரது உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அதேபோல், திமுக மூத்த தலைவர்களான துரைமுருகன், ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாளு அம்மாளின் உடல்நலம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. அவரின் உடல்நிலை தற்போது எவ்வாறு உள்ளது? என்பது குறித்த தகவல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.