கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு 'பெரியார்' பெயர் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை கொளத்தூர், பெரியார் நகரில் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் ரூ. 210 கோடி மதிப்பில் புதிதாக மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மருத்துவமனையை இன்று நேரில் ஆய்வு செய்தார். விரைவில் திறக்கப்படவுள்ள இந்த மருத்துவமனைக்கு பெரியார் அரசு மருத்துவமனை என்று பெயர்சூட்டவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : வணிக வளாகத்தின் மேற்கூரை இடிந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு!
இந்த புதிய மருத்துவமனையில் மொத்தம் 6 தங்கள் உள்ளன. அந்த வகையில், தரைத்தளத்தில் 20 படுக்கைகள் கொண்ட விபத்து மற்றும் அவசரச் சிகிச்சை பிரிவுகள், எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி, புறநோயாளிகள் பிரிவுகளும், முதல் தளத்தில் மகப்பேறு பிரிவு, அறுவைச் சிகிச்சைப் பிரிவு, நவீன ரத்த வங்கியும், இரண்டாம் தளத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவுகளும் உள்ளன.
மேலும், மூன்றாம் தளத்தில் மகப்பேறு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு பிரிவு, 4ம் தளத்தில் ஆண்கள் பொது மருத்துவப் பிரிவு, இரைப்பை குடலியல் பிரிவு, 5ம் தளத்தில் இதயவியல் பிரிவு, அறுவைச் சிகிச்சைப் பிரிவு, தோல்நோய் சிகிச்சைப் பிரிவு, 6ம் தளத்தில் சிறப்பு சிகிச்சை வார்டுகள், புற்றுநோயியல் பிரிவு, நரம்பியல் பிரிவு முதலான பல்வேறு பிரிவுகளுடன் மொத்தம் 260 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.