‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு அரசின் ‘தாயுமானவர்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோா் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், ‘அன்புக்கரங்கள்’ திட்டம் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
இத்திடத்தின் மூலம், அந்தக் குழந்தைகள் 18 வயது வரை இடைநிற்றல் இன்றி கல்வியைத் தொடர, மாதம் ரூ. 2,000 உதவித் தொகை வழங்கப்படும். அது மட்டுமின்றி, பள்ளிப் படிப்பை முடித்த பிறகு கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த நிலையில், சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையை வழங்கினார். மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து பிளஸ் 2 வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு மடிக்கணினிகளையும் வழங்கினார்.