மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப் பயணமாக சேலம் மாவட்டத்திற்கு நேற்று (ஜுன் 11) வருகை தந்தார். அவருக்கு ஈரோடு - சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளத்தில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து சுமார் 11 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ நடத்தினார். பின்னர், மேட்டூரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், நேற்று இரவு மேட்டூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜுன் 12) காலை டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். தண்ணீரை திறந்த பிறகு மு.க.ஸ்டாலின் காவிரி ஆற்றில் பூக்களை தூவினார். 8 கண் மதகுகள் வழியாக தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சேலத்திற்கு வரும் முதலமைச்சர், காலை 11 மணியளவில் சேலம் இரும்பாலை அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.
அங்கு முதமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,500 கோடியில் நலத்திட்ட உதவிகள், கட்டி முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் சிறப்புரையாற்றுகிறார். விழா முடிந்ததும் சேலம் அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகைக்கு திரும்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை, ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம்.