CLAT தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு தனது பேனாவை பரிசளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (ஜுன் 16) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அவர் அங்கிருந்து சென்னை புறப்பட்டார். அப்போது, தஞ்சாவூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் CLAT தேர்வில் வெற்றி பெற்று நாக்பூர் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர தகுதி பெற்ற, ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவி ராகிணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
இதையும் படியுங்கள் : Rain Alert | நாளை இங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அலர்ட்!
காரில் இருந்தவாறே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவி ராகிணிக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் தனது பேனாவை பரிசாக வழங்கினார். காரில் இருந்து இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவிக்கு சால்வை அணிவித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"தஞ்சையிலிருந்து திருச்சி செல்லும் வழியில், அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் பயின்று, CLAT-இல் தேர்ச்சி பெற்று, சட்டம்பயிலச் செல்லும் மாணவி ராகிணியைச் சந்தித்து வாழ்த்தினேன்! சாதனைகள் பல படைத்திடும் நமது திராவிட மாடல் திட்டங்களுக்குக் கையெழுத்திட்ட எனது பேனாவை, சாதனைகள் பல படைத்திட வேண்டும் என வாழ்த்தி ராகிணிக்குப் பரிசளித்தேன்!"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.