போப் லியோவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் 26ம் தேதி ரோம் நகரில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர், புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. அதன்படி, அமெரிக்காவின் சிகாகோவை சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் (69) புதிய போப் ஆண்டவராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் போப் 14ம் லியோ (leo XIV) என்ற பெயருடன் தன்னை அழைக்குமாறு கேட்டுக்கொண்டார். போப் பதவிக்கு அமெரிக்கர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறை.
இதையும் படியுங்கள் : கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு | சென்னை டூ மதுரை நாளை சிறப்பு ரயில் இயக்கம்.. எங்கிருந்து எப்போது புறப்படும்?
இந்த நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போப் 14ம் லியோவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போப் 14-ம் லியோக்கு வாழ்த்துகள். அமைதி, ஒற்றுமை குறித்த அவரது வார்த்தைகள் உலகம் முழுவதும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.