ஆப்கானிஸ்தானில் சதுரங்க விளையாட்டுக்கு தடை - தாலிபான் அரசு உத்தரவு!
ஆப்கானிஸ்தானில் 2021 ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தாலிபான் அரசாங்கம் இஸ்லாமிய சட்டத்தின் கடுமையான பார்வையை பிரதிபலிக்கும் சட்டங்களையும் விதிமுறைகளையும் தொடர்ந்து விதித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது.
இதுகுறித்து விளையாட்டு இயக்குநரக செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி கூறுகையில், "இஸ்லாமிய ஷரியாவின் கீழ் சதுரங்கம் சூதாட்டத்தின் ஒரு வழிமுறையாக கருதப்படுகிறது. இது நாட்டின் "நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையைத் தடுப்பதற்கான சட்டத்தின்" படி தடைசெய்யப்பட்டுள்ளது.
சதுரங்க விளையாட்டிற்கு மத ரீதியான ஆட்சேபனைகள் உள்ள நிலையில் அது தீர்க்கப்படும் வரை, ஆப்கானிஸ்தானில் இந்த விளையாட்டு நிறுத்தி வைக்கப்படும்" என்று கூறினார். இந்த முடிவு சதுரங்க ஆர்வலர்கள் மற்றும் தொடர்புடைய வணிகங்கள் மத்தியில் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. முன்னதாக பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்கத் தாலிபான் அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.