ஜடேஜா, சாம் கரனை கொடுத்து சஞ்சு சாம்சனை வாங்கிய சென்னை அணி...!
19 ஆவது ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அடுத்த மாதம் வீரர்களுக்கான மினி ஏலம் இந்த ஆண்டு நடைபெறுகிறது. இந்த மினி ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தங்களது அணியிலிருந்து விடுவிக்கும் மற்றும் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். மேலும் வீரர்கள் அணிமாற்றம் செய்யும் டிரேடிங் முறையும் உண்டு. அந்த வகையில் லக்னோ அணி வீரர் ஷர்துல் தாக்கூர் மற்றும் குஜராத் அணி வீரர் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு ஆகிய இருவரையும் முறையே 2 கோடி மற்றும் ரூ.2.6 கோடி தொகைகளுக்கு மும்பை அணி வாங்கியது.
இதனிடையே, சென்னை அணியில் இருந்து ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை ராஜஸ்தான் அணிக்கு அளித்து அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சென்னை அணி பெற்று கொள்ள விரும்புவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் சென்னை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரவிந்திர ஜடாஜாவை சென்னை அணி விட்டு தராது என்று கூறப்பட்டது.
ஏனென்றால் 2012-ம் ஆண்டில் இருந்து சென்னை அணிக்காக விளையாடும் ஜடேஜா முக்கியமான தருணங்களில் அணியின் வெற்றிக்கு வித்திட்டிருக்கிறார். மேலும் 2023-ம் ஆண்டு ஐபிஎலில் குஜராத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ஜடேஜா கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி தேடித்தந்தார். மேலும் 2022 ஆம் ஆண்டு சென்னை அணியின் கேப்டனாகவும் ஜடேஜா செயல்பட்டார்.
இந்த நிலையில் சென்னை அணியானது, ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை முறையே தலா 14 மற்றும் 2 கோடிக்கு கொடுத்து ராஜஸ்தான் அணியிடம் இருந்து சஞ்சு சாம்சனை 18 கோடிக்கு டிரேடிங் முறையில் வாங்கியுள்ளது.