மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு நிதியை விடுவித்தது மத்திய அரசு - தமிழ்நாட்டிற்கு ரூ. 5,700 கோடி! உ.பி-க்கு ரூ.25,069 கோடி நிதி விடுவிப்பு!
மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டிற்கு ரூ. 5,700 கோடியும் உ.பி-க்கு அதிகபட்சமாக ரூ.25,069 கோடி நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜூன் 09 அன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
நேற்று பிரதமர் இல்லத்தில் புதிதாக பொறுப்பேற்ற மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முடிவில் அமைச்சராக பொறுப்பேற்றவர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு நிதியாக ரூ.1.39 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த அறிவிப்பில் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு அதிகபட்சமாக ரூ.25,069 கோடியும், பீகார் மாநிலத்திற்கு ரூ.14,056 கோடியும் , மத்திய பிரதேசத்திற்கு ரூ.10,970 கோடியும் வரி பகிர்வு நிதியாக விடுவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாட்டிற்கு வரிப்பு பகிர்வு நிதியாக ரூ. 5,700 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.