“வாக்குச்சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும்” - ராகுல் காந்தி எம்.பி.!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து இன்று(ஜூன்.07) காலை தனது எக்ஸ் பதிவில் குற்றம் சாட்டினார். அந்த பதிவில், தேர்தல் ஆணையத்தை நியமிப்பதற்கான குழுவைத் திரட்டுதல், பட்டியலில் போலி வாக்காளர்களைச் சேர்த்தல், வாக்காளர் வாக்குப்பதிவை அதிகரித்தல், பாஜக வெற்றி பெற வேண்டிய இடத்தில் போலி வாக்குகளை குறிவைத்தல், ஆதாரங்களை மறைத்தல் என்ற ஐந்து படிநிலைகளில் மகாராஷ்டிரா தேர்தலில் மேட்ச் பிக்சிங் நடந்ததாகவும், இது அடுத்து வரவுள்ள பீகார் தேர்தலிலும் இது நடக்கும் என்றும் கூறினார்.
இதற்கு பதில் தரும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது. அதில், குற்றச்சாட்டுகள் அபத்தமானது என்று தெரிவித்ததுடன், வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணுதல் உள்ளிட்ட ஒவ்வொரு தேர்தல் செயல்முறையும் அரசு ஊழியர்களால் நடத்தப்படுகிறது, அதுவும்வேட்பாளர்களால் நியமிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறுவது நாட்டுகே தெரியும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் அதில், தவறான தகவலை கூறுவது சட்டப்படி குற்றம் மட்டுமின்றி, அவர்களின் சொந்த அரசியல் கட்சியால் நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது என்றும் மேலும் தேர்தல்களின் போது அயராது மற்றும் வெளிப்படையாகப் பணியாற்றும் லட்சக்கணக்கான தேர்தல் ஊழியர்களின் பணிநீக்கத்துக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மாகாராஷ்டிரா தேர்தல் நடந்த அனைத்து வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பதில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “டியர் தேர்தல் ஆணையம் மாகாராஷ்டிரா தேர்தலில் மறைப்பதற்கு எதுவும் இல்லையென்றால், அனைத்து வாக்குச்சாவடிகளின் மாலை 5 மணிக்குப் பிறகான சிசிடிவி காட்சிகளை வெளியிடுக, அதே போல் சமீபத்தில் நடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களின் ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் வடிவில் வெளியிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.