“சாதிவாரி கணக்கெடுப்பு தேசிய பிரச்னை... அன்புமணி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்” - திருமாவளவன்!
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முகாம் செயலாளர்கள் மாநாடு
நடைபெற்றது. மாநாட்டுக்கு பிறகு செய்தியாளரிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்,
“வருகின்ற மே-31ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பேரணி நடைபெற உள்ளது. தேசிய அளவில் சமூக நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும், வெறுப்பு அரசியலை தவிர்க்க வேண்டும் என்பதை முன்னுறுத்தி இந்த பேரணி நடைபெறவுள்ளது.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை. மே 18ஆம் தேதி ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிறைவேந்தல் நிகழ்ச்சி
நடத்தப்படும். காஷ்மீரில் நடந்த பயங்கரவாத படுகொலை மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
இந்திய மக்களிடையே சகோதரத்துவத்தை பாதுகாக்காமல் இத்தகைய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியாது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகிய சங் பரிவார் அமைப்புகள் இந்தியர்களிடையே மதத்தின் பெயரால் முரண்பாடுகளை கூர்மைப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு அரசியலை விதைக்கிறார்கள்.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாதம் இனி தொடராமல் இருக்க வேண்டுமானால் இந்தியர்கள் அனைவரும் மதம் கடந்து, சாதி கடந்து சகோதரர்களாய் இணைய வேண்டும். காஷ்மீர் படுகொலைக்கு அரசின் தவறான கொள்கை முடிவுகளும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு உரிமையை ரத்து செய்ததும் மிக முக்கிய காரணங்களாகும்.
எனவே பாஜக அரசு சகோதரத்துவத்தை பாதுகாக்க, இஸ்லாமியர், கிறிஸ்தவர் ஆகியோர் நலன்களை பாதுகாக்க உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆளுநர் அவர்களின் அத்துமீறல் நடவடிக்கைகளால் குழப்பங்கள் உருவாகின்றன.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை ஏற்க ஆளுநர் மறுக்கிறார். இதுவரை எந்த ஆளுநரும் செய்யாத பல குளறுபடிகளை ஆட்சி நிர்வாகத்திற்கு எதிரான செயல்களை ஆளுநர் தொடர்ந்து செய்கிறார்.
அதனுடைய விளைவாகத்தான் துணைவேந்தர்கள் தன்னிச்சையாக புறக்கணிப்பு செய்துள்ளனர். ஆளுநரின் நிலைப்பாடு என்பது துணைவேந்தர்களுக்கு ஒரு தேவையற்ற நெருக்கடியை உருவாக்குகிறது. ஆளுநர் தனது போக்கை மாற்றிக்கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆளுநர் தன் பொறுப்பை மறந்து அரசியல்வாதி போல செயல்பட்டு வருகிறார்.
காஷ்மீர் பிரச்னையை மத அடிப்படையில் பாஜக கையாள்கிறது. பாகிஸ்தான்
இஸ்லாமியர்களுக்கான நாடு. இந்தியா இந்துக்களுக்கான நாடு என்கிற ஒரு விவாதத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள், இது மிகவும் ஆபத்தான ஒரு அரசியல். பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே போர் ஏற்பட்டால் அப்பாவி மக்கள்தான் கடுமையாக பாதிக்கப்படுவார். உலக அரங்கிலும் இந்தியாவுக்கு உள்ள நன்மதிப்பு பாழாகும். இதனை அரசியல் ரீதியாக கையாள வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பை இந்திய அரசுக்கு கோரிக்கை வைக்க ஏன் அன்புமணி
தயங்குகிறார். இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய
பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. இது தமிழ்நாட்டுக்கு மட்டும் உரிய பிரச்சினை அல்ல. இது தேசிய அளவிலான பிரச்சனை. எல்லா மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் இட ஒதுக்கீடு போன்ற நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்.
இதனை தேசிய பிரச்சினையாக பார்க்காமல், மாநில பிரச்சனையாக பார்க்கிறார்கள். இந்திய மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பாமக பேச வேண்டும்” என தெரிவித்தார்.