கேப்டன்... கேப்டன்... | மக்கள் வெள்ளத்தில் விஜயகாந்த் இறுதி ஊர்வலம்!
விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில், வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தேமுதிக தலைவரும், எதிா்க்கட்சி முன்னாள் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானாா். மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டது. ஏராளமான மக்கள் அலைகடல் என திரண்டு வந்து விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, இன்று பகல் 2.30 மணிக்கு தீவுத்திடலில் இருந்து விஜயகாந்த் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்த் இறுதி நிகழ்ச்சிக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில், வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேப்டன்... கேப்டன்... என தொண்டர்கள் கண்ணீருடன் பிரியாவிடை அளித்து வருகின்றனர்.