தேர்தல் பத்திரம் ரத்து தீர்ப்பை அதிமுக வரவேற்கிறது - எடப்பாடி பழனிசாமி பேட்டி
தேர்தல் பத்திரம் ரத்து தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை அதிமுக வரவேற்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் நான்காவது நாளான இன்று நடைபெற்று வருகிறது. இன்று கூட்டத்தொடர் தொடங்கியதும் கேள்வி, பதில் நேரம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். இதில், நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி உள்பட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியும் வந்தனர்.
அப்போது, அவர் பேசியதாவது :-
திமுக தலைமையிலான 33 மாத ஆட்சியில் வெவ்வேறு காரணங்களுக்காக 52 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. திமுக அரசு அமைத்த 52 குழுக்கள் என்ன செய்கின்றன என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வு தொடர்பாக பட்டியலிட்டோம். அரசிடம் பதில் இல்லை. கட்டுமானப் பொருட்கள் விலை உயர்ந்து, கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவிடம் இருந்து காவிரியில் முறையாக, உரிய தண்ணீரை பெறாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. 520 தேர்தல் வாக்குறுதிகளில் 97% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக திமுகவினர் பச்சை பொய் சொல்கின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில் விஞ்ஞானப்பூர்வமாக கூட நிறைவேற்ற முடியாத அளவிற்கு கவர்ச்சிகர வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.
ஆரம்ப சுகாதார நிலையங்களை எனது ஆட்சியில் திறக்கவில்லை என்றார்கள், அதை நான் மறுக்கிறேன். அதிமுக தலைமையிலான ஆட்சியின் போது 42 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டன. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானது. சட்டமன்றத்தில் நான் பேசுவதை நேரலையில் ஒளிபரப்புவதில்லை. அந்த வீடியோ காட்சிகளை கூட கொடுப்பதில்லை.
தேர்தல் பத்திரங்கள் மூலம் எங்களை போன்ற கட்சிகளை ஒடுக்குகிறார்கள். பாஜக மட்டும் தான் தேர்தல் பத்திரம் மூலம் பணம் பெற்றுள்ளதா? திமுகவும் தான் பெற்றுள்ளது. தேர்தல் பத்திரம் ரத்து தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை அதிமுக வரவேற்கிறது.
பேரவையில் நேற்று நான் ஒன்றரை மணிநேரம் பேசிய பேச்சுகளின் காட்சிகளை ஒளிபரப்பவில்லை. வழங்கவும் இல்லை. திமுக அரசு 33 மாதங்களில் ரூ.2.47 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். என்ன புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். மெட்ரோ 2ம் கட்ட பணிகள், நிதி ஒதுக்கீடு தொடர்பான விவரங்களையும், விளக்கங்களையும் கேட்டோம். இன்னும் தரவில்லை. எதிர்கட்சியாக மக்கள் பிரச்சனையை சுட்டிக்காட்டுவது எங்களின் கடமை.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.