தொழிலதிபருக்கு வந்த குறுஞ்செய்தி... பறிபோன ரூ.19 லட்சம்... இருவரை தட்டி தூக்கிய போலீசார்!
திருப்பூரை சேர்ந்தவர் தில்லைராஜன் (தொழிலதிபர்). இவருடைய செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டது. இதுகுறித்து சற்றும் யோசிக்காத அவர் டெலிகிராம் செயலிக்கு சென்று குறிப்பிட்ட வங்கிக்கணக்குக்கு பல தவணைகளில் ரூ.19 லட்சத்து 53 ஆயிரத்து 72-ஐ செலுத்தினார். பின்னர், அதற்கு கூடுதல் லாபத்தொகை கிடைத்திருப்பதாக தில்லைராஜனிடம் அடையாளம் தெரியாத நபர்கள் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள் : டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்குமா இந்தியா? – இங்கிலாந்து அணியுடன் இன்று மோதல்!
தில்லைராஜன் லாபத்தொகையுடன் பணத்தை எடுக்க முயன்றார். அப்போது வரி மற்றும் காப்பீட்டுதொகையாக கூடுதல் பணத்தை செலுத்தினால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் என்று அவர்கள் கட்டுப்பாடு விதித்தனர்.
அதன்பிறகே அவர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இதுகுறித்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து, தில்லைராஜனை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்டு பணத்தை ஏமாற்றியதாக கேரள மாநிலத்தை சேர்ந்த விபின்தாஸ்(வயது 35), முனாஸ்(38) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.