லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பேருந்து - 41 பேர் உயிரிழப்பு!
மெக்சிகோ நாட்டில் குயிண்டினா ரோ மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தின் கான்கன் நகரில் இருந்து டபாஸ்கோ நகருக்கு நேற்று பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 48 பேர் பயணித்தனர். எஸ்கார்சிகா என்ற பகுதியில் சென்றுக்கொண்டிருந்தபோது ஓட்டுரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் எதிரே வந்த லாரி மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் பேருந்து தீப்பற்றி எரிந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் தீயில் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.