பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இண்டர்போல் மூலமாக நாட சென்னை காவல்துறைக்கு மெயில் நிறுவனம் பதில்!
சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் மெயில் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம் அனுப்பிய நிலையில், இண்டர்போல் மூலமாக நாட வேண்டும் என மெயில் நிறுவனம் பதில் கடிதம் அளித்துள்ளது.
சென்னையில் நேற்று 13 தனியார் பள்ளிகளுக்கு மெயில் மூலமாக வந்த வெடிகுண்டு
மிரட்டல் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, இந்த செய்தி வெறும் வதந்தி எனவும் பெற்றோர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும், குற்றவாளி கூடிய விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக அந்தந்த பள்ளி வட்டாரத்திற்குட்பட்ட காவல் நிலையத்தில் மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபர் யார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மெயில் மூலமாக மிரட்டல் வந்திருப்பதால் சென்னை காவல்துறை குற்றவாளியை கண்டுபிடிப்பதில் சற்று சிரமம் உள்ளதாக கூறுகிறது. இதனால் உடனடியாக இவ்வழக்கை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மெயில் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. குறிப்பாக வெடிகுண்டு
மிரட்டல் விடுத்த நபர் பயன்படுத்திய ஐடி, எந்த செல்போன் எண் மூலமாக
துவங்கப்பட்டது என கேட்டு சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட மெயில்
நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியது. ஆனால் தகவல்களை தர மெயில் நிறுவனம்
மறுத்துவிட்டதாகவும், இண்டர்போல் மூலமாக வந்தால் தான் தகவல் தர முடியும் என
தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் அடுத்தக்கட்டமாக நோடல் அதிகாரிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் எழுதி, அவர்கள் மூலமாக இண்டர்போலை நாட சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரபல இமெயிலை பயன்படுத்தினால் போலீசாரிடம் குற்றவாளி எளிதில் சிக்கிவிடுவார் என்பதால் சிக்காமல் இருக்க வெளிநாட்டு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் கூடிய விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.