சென்னை, கோவையில் பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை மற்றும் கோவையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி வளாகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இன்று (மார்ச் 1) காலை அழைத்திருந்த மர்ம நபர் ஒருவர், தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து விட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸார் தலைமைச் செயலகம் முழுவதும் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மோப்ப நாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனை நடத்தினர். அதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, மின்னஞ்சல் மூலமாக தனியார் பள்ளி ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சென்னை மாங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் பி.எஸ்.பி.பி.மில்லினியம் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் பள்ளி வளாகத்தில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது மர்ம பொருள் எதுவும் சிக்கவில்லை.
காவல்துறையினர் பள்ளியில் சோதனை நடத்துவதை அறிந்து ஏராளமான மாணவர்களின் பெற்றோர் அங்கு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை உருவாக்கியது. இந்த நிலையில் மீண்டும் இப்போது வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள மாணவர்கள், பெற்றோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.