“தேர்தலுக்கு பின் பாஜக அரசு முழு பட்ஜெட் தாக்கல் செய்யும்” - பிரதமர் மோடி...!
“தேர்தலுக்கு பின் பாஜக அரசு முழு பட்ஜெட் தாக்கல் செய்யும்” என பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்று காலை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றவுள்ளார். தொடர்ந்து, நாளை காலை 11 மணிக்கு இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த நிலையில், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மூலம் மகத்தான சாதனை படைக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழா அணிவகுப்பில் பெண் சக்திகளின் வலிமை பறைசாற்றப்பட்டது. அதேபோல், இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையும், நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் தாக்கலும் உள்ளது. நாடாளுமன்ர விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். விவாதங்கள் தீவிரமாக இருக்கலாம்.
இடையூறு செய்யும் வகையில் இருக்கக்கூடாது. நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவோரை வரலாறு நினைவில் வைத்திருக்காது. கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்று வந்த பின் பா.ஜ., அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.